க.கிருபாகரன்
கல்லடி செய்தியாளர்
தேசிய மக்கள் சக்தி தீர்க்கமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்களுக்கு மக்கள் தெளிவான செய்தியைச் சொல்லியுள்ளார்கள். இந்த வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பும் நிறைந்திருக்கின்றது என்பதோடு,மலையக தமிழ் பெண்கள் மூவர் உட்பட அதிகமான பெண்களைப் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்வது விசேட கவனத்திற்குரியது. இதை சாத்தியமாக்கிய,இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமும், அரசியல் கலாசாரமும் ஏற்படுவதற்குக் காரணமான தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார தோழருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என ஈரோஸ் ஜனநாயக முன்னணிப் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றியீட்டியமையைப் பாராட்டி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
நீங்கள் எதிர்பார்க்காத வெற்றியை மக்கள் உங்களுக்குத் தந்துள்ளார்கள். இதன்மூலம் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கும் இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்கும், மலையக மக்களின் நிலவுரிமை, அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்காண்பதற்குமான ஆணையை மக்கள் வழங்கியுள்ளார்கள்.
எனவே மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்குமென நம்புகின்றோம்.
நாட்டில் தேவையற்ற வீண்விரயங்களைத் தவிர்த்து உற்பத்தி மற்றும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். ஒரு அங்குல விவசாய நிலமும் தரிசாக கிடக்கக் கூடாது.விவசாயிகள், கால்நடை வளர்ப்பார்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் திட்மிட்டு காடாக்கப்பட்டு கைவிடப்பட்ட பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்களை மீளவும் நடுகைக்குட்படுத்த உங்கள் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்குமென எதிர்ப்பார்க்கின்றோம்.
புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் விவசாய மற்றும் உற்பத்திப் போராட்டத்திற்கு நாங்களும் ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குதௌ தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான எமது முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் அரசாங்கம் நாட்டினது பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் காட்டும் அக்கறையை வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன், நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த அரசாங்கமாக அமைய வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறேன் எனவும் அவ் அறிக்கையில் மேலும் வாழ்த்தியுள்ளார்.
க.கிருபாகரன்
கல்லடி செய்தியாளர்





