இந்தியாவின்(India) மக்கள் தொகை 2060ம் ஆண்டில் 170 கோடியாக உயரும் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக மக்கள் தொகை உயர்வு தொடர்பான ஐ.நா(UN) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உலக மக்கள் தொகை அடுத்த 50 - 60 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உயர்ந்து, 2080ம் ஆண்டு மத்தியில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, 820 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, 2080ல் 1,030 கோடியாக உயரும்.
மக்கள் தொகையில் சீனாவை(China) முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியா 2,100 வரை அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். இப்போது, 145 கோடி யாக உள்ள இந்திய மக்கள் தொகை, 2054ல் 170 கோடியாக உயர்ந்து உச்சம் தொடும்.
பூமியின் அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்த நுாற்றாண்டு முழுதும் இந்தியா திகழும். தற்போது 141 கோடியாக உள்ள சீன மக்கள் தொகை 2054ல் 121 கோடியாக குறையும்.
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் தொகை இழப்பை அந்நாடு சந்திக்கும். வரும், 2100ல் சீன மக்கள் தொகையில் 79 கோடி சரிவு ஏற்படும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.