ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரை கொலை செய்தவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், “நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பல பாரதூரமான பிரச்னைகள் எழுந்துள்ளன. அத்துடன், சமூகம் எங்கும் வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இது தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தை அரசியலாக்க நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன்” என்றும், “சமூகத்தில் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பெரும் பிரச்னையாக மாறியுள்ளது” என்றும் தெரிவித்தாா்.
“சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதன் மூலம் வன்முறையை ஒழிக்க எதிர்க்கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும்” என்று உறுதியளித்த சஜித் பிரேமதாஸ, “வன்முறைகள் காரணமாக நாட்டின் பொது மக்கள் பல பிரச்னைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினாா்.
“ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரை கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். கீத் நொயர், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்களை தாக்கியவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். லசந்த விக்கிரமதுங்கவின் சிறந்த நண்பர் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். என்றாலும் லசந்த விக்ரமதுங்கவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தாா்.