மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாத் தளமாக மாற்றுவற்கான கலந்துரையாடல்!

 
 

 


 

 







 

(மட்டக்களப்பு நிருபர்)

 

 



 

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றது.

எமது நாட்டுக்கு  வருமானத்தை பெற்றுத் தரும் ஒரு துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.
இத் துறையை வலுப்படுத்தி எமது மாவட்டத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக மாவட்டத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல் துறைசார் நிபுணர்களுடன் நடைபெற்றது.

எமது மாவட்டத்தின்  புராதன இடமாக ஒல்லாந்தர் கோட்டை காணப்படுவதனால் இக்கோட்டையை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ் வளாகத்தில் புராதன நூதனசாலை ஒன்றை அமைத்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு பிரதேசத்திற்கு உரித்தான உணவுகளைச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கல், பாரம்பரிய கலை கலாசார விடயங்களைச் சுற்றுலாப் பயணிகள் ஈக்கும் விதமான செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் துறைசார் நிபுணர்கள் நிகழ்நிலையூடாக  கலந்து கொண்டு தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள்,அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.