மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் வேப்பவெட்டுவான் கிராம சேவையாளர் பகுதியில் அமைந்துள்ள பாலர்சேனை கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இங்கு குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாக பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது .இங்கு 90 வீதமான மக்கள் கூலித் தொழில் செய்பவர்களே வாழ்ந்து வருகிறார்கள்
இந்த கிராமத்தில் ஆழ்குழாய் கிணறுகள் குடிநீர் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன .
இக் கிணறுகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பழுதடைந்து விடும் ., அவற்றை திருத்தி அமைத்தால்தான் அதனை பயன் படுத்த முடியும்.
தற்போது 06 குழாய் கிணறுகளும் , கல்லால் கட்டப்பட்ட சில பொது கிணறுகளும் உள்ளன. பொது கிணறுகள் அனைத்தும் கோடை காலத்தில் வற்றி விடும் , குழாய்கிணறுகளில் தண்ணீர் இருக்கும் அவை பழுதடைந்து விட்டால் தண்ணீர் பெற்று கொள்ள முடியாது
இப்போது வரட்சிக் காலம் ஆரம்பமாகிய நிலையில் , மக்கள் தூர இடங்களுக்கு சென்றுதான் வெகு சிரமத்தின் மத்தியில் தண்ணீரை பெற வேண்டி இருக்கிறது.
குழாய் கிணறுகளை திருத்தி தருமாறு பலரிடம் பொது மக்களால் வேண்டுகோள் விடுத்திருந்த போதும் எவரும் உதவி செய்ய முன் வரவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியின் உரிமையாளர் தேசபந்து செல்வராசா அவர்களை நாடி உதவி கேட்ட போது அவர் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு உடனடியாக மூன்று குழாய் கிணறுகளை திருத்தி அமைப்பதற்கு முன் வந்துள்ளார் , அதன் அடிப்படையில் தேசபந்து செல்வராசா அவர்கள் களப்பயணம் ஒன்றை மேற்கொண்டு கிராமத்துக்கு வருகை தந்து மக்களிடம் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்ததுடன் உடனடியாக பழுதடைந்த மூன்று குழாய் கிணறுகளை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்தார் .
அத்தோடு அவசர சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மடுக்களை தோண்டி தண்ணீரை பெற்றுக்கொள்கின்றனர், இந்த செயற்பாடு சுகாதாரமற்றதும் , பாதுகாப்பற்றதுமாகும் என்பதனையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கு பதிலாக கொங்கிறீட் குழாய்களை பொருத்திய நிரந்தரமான சில கிணறுகளை அமைத்து தர உரிய நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டார் , மேலும் பால்சேனை கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை படிப்படியாக தீர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்
தேசபந்து செல்வராசா அவர்களின் மனிதநேய உதவிக்காக கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்திருந்தனர்