தற்போதைய பொருளாதார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் பழைய கடினமான நிலை ஏற்படலாம் - மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

 


நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியில்  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டும் வழமைக்கு திரும்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்

IMF திட்டத்துடன் இணக்கம் காணப்பட்ட இலக்குகள் என்பது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட செயற்றிட்டம் என சுட்டிக்காட்டிய ஆளுநர், அரசாங்கம் இணங்கியுள்ள குறித்த செயற்றிட்டத்தை தற்போதைய முறையில் தொடர்ந்தால் நிலையாக பேண முடியும் என தாம் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய பொருளாதார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் பழைய கடினமான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் , தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கொள்கை எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.