இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தினப் பிரகடனம்.

 

 







வரதன்

 மட்டக்களப்பு மாவட்ட  பெரிய கல்லாற்றில்  இலங்கைத் தமிழரசுக் கட்சியினால், மே தினத் தொழிலாளர் எழுச்சிக்கான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது .
 இதன்போது கட்சியின் மே தினப்பிரகடனத்தை அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பின் தலைவி திருமதி றஞ்சினி கனகராசா வாசிக்கப்பட்டது . இதன்போது அதில் தெரிவிக்கப்பட்டதாவது….
 இன்றைய நாளில் எமது கட்சி சார்பாக,  மே தினத் தொழிலாளர் எழுச்சிப் பிரகடனத்தை வெளியிடுவதில் பெருமை அடைகின்றோம்..
அந்த வகையில், அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகள், ஊழல் மோசடிகளால் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
 இதனால் தொழிலாளர் வர்க்கமும் எமது மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எமது கட்சி உணர்கின்றது. பொருட்களின் விலைவாசி ஏற்றத்தாலும், பாரிய வரிச் சுமையாலும் எமது தொழிலாளர்களும், மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொழில் இல்லை, வருவாய் இல்லை, என்ற காரணத்தினால் நமது இளம் தொழிலாளர்கள் நாட்டை விட்டு அயல்நாடுகளில் தொழில் வேண்டி அலைகின்றனர்.
 அங்கும் குறைமட்ட வேதனத்தில் பணிகளாற்றுகின்றனர்.
மயிலத்தமாடு , மாதவனை கால்நடை வளர்ப்பாளர்களது   மேய்ச்சல் தரையானது, அயல் மாவட்ட ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கால்நடை வளர்ப்பும் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
 விவசாயம், மீனவத் தொழில், மலையகத் தோட்டத் தொழில், கூலித் தொழில், அரச தொழில்கள் மற்றும் தொழில்கள் எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
 நிறைவளம் மிக்க நமது நாட்டில் குறைவயிற்றோடு தொழிலாளர்கள் மற்றும் அதிக மக்கள் வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 75 ஆண்டுகள் காலமாக இந்த நாட்டினை ஆட்சி செய்த அதிகார வர்க்கமும், அதற்குச் சார்பாகச் செயற்பட்ட அதன் உறவாளர்களும் காரணர்களாக இருந்தனர். அதனை அவர்களே பொறுப் பேற்கவேண்டும்.
 இதனை விடவும் காணாமல் ஆக்கப்பட உறவுகளின் ஏக்கம், கண்ணீர், வாழ்வாதாரம் என்பவற்றுக்கும் இன்றைய ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை.

 அரசியல்கைதிகள், முன்னாள் போராளிகள், மாற்றுதிறனாளிகள், விதவைகள், ஏதிலிகள் ஆகியோருக்கான விடுதலை பரிகாரங்கள் அரசினால் மேற்கொள்ளப்படவில்லை.
 
எனவே, அரசின் பொறுப்பற்ற தான்தோன்றித் தனமான செயல்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளான சகலருக்குமான நீதி, நிவாரணம், பரிகாரம் அனைத்தும் அரசினால் மேற்கொள்ளபபட வேண்டும் என்பதை மட்டக்களப்பு மாவட்ட 2024 இற்கான மேதினப் பிரகடனமானது ஜனாதிபதியையும் அரசாங்கத்துறையும் வலியுறுத்திக் கையளிக்கின்றது.
 
இவை அனைத்திற்குமான தீர்வு என்பது, தமிழர்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்குரிய நியாயமான தன்னாட்சிசார்ந்த கூட்டாட்சிமுறைதான் என்பதையும் எமது மேதினப்பிரகடனம் ஸ்ரீலங்கா அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் மீண்டுமொருமுறை வலியுறுத்துகின்றது. என தெரிவித்தார்