கலாநிதி அ.விமல்ராஜ் எழுதிய நாடகவாக்க அணுகுமுறைகள் நூல் வெளியீடு- மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்





































(கல்லடி செய்தியாளர்)

கலாநிதி அழகையா விமல்ராஜ் எழுதிய
நாடகவாக்க அணுகுமுறைகள் நூல் வெளியீடு மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில்  திங்கட்கிழமை (29) இடம்பெற்றது.

கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில்,இந்தியா மதுரைத் திறனாய்வாளர் பேராசிரியர் அ.ராமசாமி பிரதம விருந்தினராகவும்,கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சி.ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழர் பாரம்பரியத்தை வெளிக் கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நூல் வெளியீட்டில், விபுலானந்தர் பாடல்,வரவேற்புரை,தலைமையுரை இடம்பெற்று,நூல் வெளியீடு அரங்கேறியது.

நூலின் முதன்மைப் பிரதிகளை நூலாசிரியரின் தாயார் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர்  பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி,பேராசிரியர் அ.ராமசாமி,பேராசிரியர்  சி.ஜெய்சங்கர்,கிழக்குப் பல்கலைக்கழக கலை,கலாசாரப் பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம்,பேராசிரியர் வ.இன்பமோகன் ஆகியோருக்கு வழங்கி வைத்தார்.

இதன்போது வெளியீடு செய்யப்பட்ட "நாடகவாக்க அணுகுமுறைகள்" நூலின் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நடன,நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் நிகழ்த்தினார்.

இறுதியாக நூலாசிரியர் அ.விமல்ராஜ் அழகு தமிழில் ஏற்புரையினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.