இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

 

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு  எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கருத்துரைக்கையில், 

07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2ஆம்,4ஆம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.ஸ்ரீதரன், செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன். சுமார் மூன்று மணி நேரம் இவ்வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

 இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால், காலம் செல்லும், இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில், வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும். வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்கவேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில்  தெரிவித்தேன் என்றார்.