பாராளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கும் ஒரு சில பெண் உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஒழுக்க மீறல் சம்பவங்களின் போது, அது தொடர்பான விசாரணைகள் சபாநாயகரின் வழிகாட்டுதலின் கீழ் மிகவும் பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவான விசாரணைகளுக்கு சபாநாயகர் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், எந்த விதத்திலும் அதில் தலையிடுவதோ அல்லது செல்வாக்குச் செலுத்துவதோ இல்லை எனவும் குஷானி ரோஹணதீர வலியுறுத்தினார்.
இதற்கு முன்னர் ஒருசில பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று பதிவாகியிருந்தாலும், அது தொடர்பாக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு மிகவும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி அந்த விசாரணை அறிக்கை தற்போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டத்தை அமுல்படுத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.





