மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் இடம்பெற்ற "தாலாட்டு“ சிறுவர் தின விசேட நிகழ்வு!!


                     "வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக பிளிர்வோம்" எனும் கருப்பொருளில்  மட்டக்களப்பு,  மயிலம்பாவெளி உதவும் கரங்கள்  அமைப்பினால்  முன்னெடுத்து வரும்  செயல்திட்டத்தின் 2023  ஆண்டில் சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் “தாலாட்டு“  சிறுவர் தின விசேட நிகழ்வு உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.

உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சதாசிவம் ஜெயராஜா தலைமையில்  உதவும் கரங்கள் அமைப்பின்  இல்லத்தில்   நடைபெற்ற சர்வதேச  சிறுவர்தின நிகழ்வில் சிறுவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சாதனைபடைத்த சிறுவர்களுக்கான சிறுவர் தின பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதாகார சபை நிறேவேற்றுப் பொறியியலாளர் எந்திரி அ.லிங்கேஸ்வரன் அவர்களும் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி த.கணேசரெத்தினம் அவர்களும் கௌரவ அகதிகளாக வட்ஸ் அமைப்பின் தலைவர் எல்.ஆர். டேவிட்,  கதிரவன் பட்டிமன்ற பேரவை தலைவர் கதிரவன் த.இன்பராசா,  கவிவாணர்  கல்லூர் சாந்தி ஆகியோருடன் சட்டத்தரணி அன்பழகன் குரூஸ், தாய்சேய் நல சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கி.கிரிசுதன், டாக்டர்  திருமதி.கே. அகல்யா , டாக்டர்  திருமதி லி.டுசித்ரா மற்றும் பல சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

கனேடிய  சி.ஆர்.இ.பி (C-REP) அமைப்பின் நிதி உதவியில் கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பினால் " வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக பிளிர்வோம்" எனும் கருப்பொருளில் முன்னெடுத்து வரும்  செயல்திட்டத்தின் கீழ் கிழக்குமாகாணத்தில் வறுமை கோட்டின் கீழ்  வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், மாணவர்களின் கல்வி மேம்பாடு போன்ற அடிப்படை தேவைகளை அபிவிருத்தி செய்யும் பல  செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.