மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது

 


மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில்  இரவு இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் மேலும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டிற்கு சுமார் 02 நாட்களுக்கு முன்னர் மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயலவர்களால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீட்டுக்குச் சென்ற பொலிஸார், தலையை மூடி கை கால்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

அவர்களில் இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கொல்லப்பட்ட இலங்கையர்கள் மற்றும் கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.