2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து, அதன் பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி உயர்ஸ்தானிகர், 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்ச்சியாக கூறி வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தொடர் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளதாக பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைக்கு சர்வதேச புலனாய்வு அதிகாரிகளின் உதவி பெறப்பட வேண்டும் எனவும், அது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் எனவும், இதற்காக ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது பரிந்துரைகளில் உள்ளடக்கியுள்ளார்.