ரோட்டரி கழகத்தின் புதிய தலைவராக தேசபந்து செல்வராசா பதவிப் பிரமாணம்!!

 










































மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் 2023 - 2024 ஆண்டிற்கான தலைவர் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை  (07) திகதி மட்டக்களப்பில் விமர்சையாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ரோயல் மண்டபத்தில் இடம்பெற்ற
பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கலந்து சிறப்பித்தார்.

ரோட்டரி கழகத்தின் உறுப்பினர்களினால் அதிதிகள் மற்றும் புதிய தலைவர் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து, மங்கல வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து புதிய தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் மேளதாள வாத்தியம் முழங்க, வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து 2023 - 2024 ஆண்டிற்கான புதிய தலைவராக தொழிலதிபர் தேசபந்து எம்.செல்வராசா பதவிப் பிரமாணம் மேற்கொண்டு தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப் பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.பகீரதன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள்,
புதிய தலைவரின் பாரியார் திருமதி சுகிர்தா செல்வராஜா, உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், கழகத்தின் முன்னாள் தலைவர் வைத்திய கலாநிதி ஸ்ரீநாத், கழகத்தின் செயலாளரும், கிழக்கு
பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தருமான கே.கருணாகரன், கழகத்தின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது
கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

தொழிலதிபர் தேசபந்து எம்.செல்வராசா மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் 2 ஆவது தலைவராக கடமையினை பொறுப்பேற்றதன் நினைவாக வறிய மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கான உதவிகள் இதன்போது 2 பாடசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன், பிரதம அதிதியை கௌரவிக்கும் முகமாக புதிய தலைவரினால் நினைவுப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதம அதிதி, சிறப்பு அதிதிகள் மற்றும் புதிய தலைவர் உரை என்பவற்றினைத் தொடர்ந்து, சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் புதிய தலைவருக்கு மலர்மாலைகள் அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் தேசபந்து எம்.செல்வராசா மட்டக்களப்பில் நீண்டகாலமாக சமூக ஆர்வலராக செயற்பட்டு பல ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணமான மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டுவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.