மக்களை மீட்டெடுத்து சுயமாக கௌரவமாக வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே தனது நோக்கம் - டக்ளஸ் தேவானந்தா

 

 


கடந்தகால சூனிய அரசியல் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்று தெரிவித்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, அதில் இருந்து மக்களை மீட்டெடுத்து சுயமாக கௌரவமாக வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்று தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு மாவட்டத்துக்கான விஜயமொன்றை சனிக்கிழமை (08) மேற்கொண்டார்.

தம்பிலுவில் கனகரெட்ணம் கட்டடத்தில் சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சர் கூறினார்.

மக்கள் சந்திப்பு நிகழ்வானது விவசாய போதனாசிரியரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் திருக்கோவில் பிரதேச இணைப்பாளர் மு.கங்காதரன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட மக்களினால் அமைச்சரிடன் மகஜர்கள் கையளிக்கப்பட்டதுடன் பொது விடயங்கள் பற்றிய கலந்துரையாடலும் கட்சியின் எதிர்கால பயணம் நிகழ்வு வேலைதிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பில், திருக்கோவில் பிரதேச ஆலயங்களின் நிருவாகத்தினர் சமுக சேவையாளர்கள் விவசாய சங்க உறுப்பினர்கள்  பொது மக்கள் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்