ஜம்மு காஷ்மீர் மிதக்கும் சந்தை (Floating Market)

 நீர்மை இணையம்






‘தால் ஏரி’ (Dal Lake) பிரபலமான கோடைவாசஸ்தலங்களில் ஒன்று. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும், உலகப் புகழ்பெற்ற மிதக்கும் சந்தைக்குப் (Floating Market) பெயர்பெற்றது. இந்தச் சந்தை ‘குத்ரி சந்தை’ (Kudri Market) எனவும் குறிப்பிடப்படுகிறது.
தேவதாரு மரங்களைக்கொண்டு செய்யப்பட்ட ‘ஷிகரா’ (Shikara) படகுகள் மூலம் ஏரியின் மையப்பகுதியில் சந்தை நடைபெறுகிறது.

அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை சந்தை நடைபெறும். பழங்கள், பூக்கள், உணவுப்பொருட்கள், நீர்க்கடலைகள், பிரசித்திபெற்ற ‘நட்ரு’ (Nadru) எனப்படும் தாமரைத் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பண்டம், லாவாஸ், கிர்தா எனப்படும் காஷ்மீரி ரொட்டி ஆகியவை மிக அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
தால் ஏரியை ஒட்டிய 1,250 ஏக்கர் பரப்பளவுள்ள ‘மிதக்கும் தோட்டம்’ (Floating Garden) என்று அழைக்கப்படும் விளைநிலங்களில், தாமரை உள்ளிட்ட பல வகை மலர்களும், நீர்க்காய்கறிகளும் ஏரியின் நீரிலேயே பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்தில் விற்பனைக்கு வந்துவிடுகிறது. மிதக்கும் சந்தையை அதிகாலையில் காண்பதற்கு ஏரியிலிருக்கும் படகு வீடுகளில் முந்தைய நாள் இரவிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்கிக்கொள்வார்கள்.
தால் ஏரியில் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஒரு மிதக்கும் தபால் நிலையமும் செயற்பட்டு வருகிறது. ஏரியைச் சுற்றி உள்ள சிறுசிறு தீவுகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்களுக்கென இது செயற்படுகிறது.