(கனகராசா சரவணன்)
அம்பாறை
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி மீது பாலியல்
சேட்டை விட முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்
ஒருவரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று
நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (12) உத்தரவிட்டார்.
குறித்த
பாடசாலையில் சில மாணவிகள் மீது ஆசிரியர்கள் பாலியல் துஷ்பிரயோம்
மேற்கொண்டு வருவதாக சமூக ஊடகங்கள் ஊடாக வெளிவந்த நிலையில் இது குறித்து
திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கமைய பெண்கள் சிறுவர்கள்
பிரிவினர் விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்ய பயப்பட்டு வருவதை அறிந்த பொலிசார் பாடசாலைக்கு சென்று
மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி முறைப்பாட்டு
பெட்டி ஒன்றை வைத்தனர்.
இதனடிப்படையில் சில
ஆசிரியர்கள் சில மாணவிகள் மீது இந்த படுபாதக செயலை செய்ய முற்பட்தை
முறைப்பாடாக எழுதிய கடிதத்தை முறைப்பாட்டு பெட்டியில் சில மாணவிகள்
போட்டுள்ளதையடுத்து பொலிசார் இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட
நிலையில் முதலில் அந்த பாடசாலையில் கல்வி கற்றுவரும் ஆசிரியர் ஒருவரை
பாலியல் சேட்டை விட முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த சனிக்கிழமை
(12) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தியதையடுத்து அவரை நீதவான் எதிர்வரும் 25ம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்
இதேவேளை
இந்த முறைப்பாடு பெட்டியில் கிடைக்கப்பெற்ற கடிதங்களில் பாலியல்
சேட்டையில் ஈடுபட்ட சில ஆசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்
அது தொடர்பாக ஆராய்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் இந்த
விசாரணையின் பின்னர் இன்னும் ஒரு சில ஆசிரியர்கள் கைது
செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





