இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி  மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி  ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்குவதற்கு எதிப்பு

 


ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி  மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி  ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிராகச் சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை (02) மாலை 5.00 மணியளவில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணி முடிந்து வெளியேறிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குறித்த மூவர் கொண்ட குழுவில் முதலாளிமார்களின் பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார். இதன் மூலம் தனியார்துறை ஊழியர்களின் ஒரே சொத்தான இந்நிதிகளின் நிர்வாகக் கட்டுப்பாடு முதலாளிமார்களிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் செப்டம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்நிதியங்களில் சுமார் 5,600 பில்லியன் ரூபாய்கள் காணப்படுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டிலும் இந்நிதிகளை நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களுக்குப் பயன்படுத்த அப்போதைய அரசு முயன்றது.

2011 இல் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு எதிரா போராடி ரொஷேன் சானக்க தனது உயிரைத் தியாகம் செய்ததுடன், நூற்றுக்கணக்கானோர் நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக மாறியதன் மூலமே அத்திட்டம் முறியடிக்கப்பட்டதாகப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.