கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பாணகொட உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க முன்னிலையில் இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டபிள்யூ. எஸ். மங்கள உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியான காஞ்சன பாணகொட, கடற்படையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்பெற்ற சேவையாற்றிய அனுபவம் கொண்டவராவார். இவர் 1994 ஆம் ஆண்டு கடற்படை மற்றும் சாகரிக பீடத்தில் (Naval Maritime Academy) 'Sub Lieutenant Technical Course' படிப்பையும், 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் கொச்சியில் உள்ள 'INS Venduruthy' நிறுவனத்தில் 'Anti–Submarine Warfare (ASW)' பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். அத்துடன் வணிக மேலாண்மையில் (Business Management) பட்டப்படிப்பையும் முடித்துள்ள இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 'ரண சூர பதக்கம்' (RSP) மற்றும் 'உத்தம சேவா பதக்கம்' (USP) உட்பட பல கௌரவ பதக்கங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
புதிய தலைவரின் அனுபவம் மிக்க தலைமையின் கீழ், இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் துறையின் பாதுகாப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு, நிறுவனம் சிறந்த முறையில் முன்னோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





