கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜை சந்தித்தது

 


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிறிசலிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜைபுதிய மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிக்கா குணவர்த்தன தலைமையிலான குழுவினர் இதில் கலந்துகொண்டதுடன், காலநிலை மாற்றத்தினால் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள், சமூகங்களின் தாங்குதிறனை மேம்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் அரச திணைக்களங்களுடனான ஒருங்கிணைப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், திட்ட முகாமையாளர் கே.வினோபவன், பிராந்திய முகாமையாளர் யூ.எல்.சம்சுதீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் மனிதநேய உதவிகள், சமூக மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திசார் செயற்திட்டங்களை கிறிசலிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.