மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும், மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்தும் அதற்கான தீர்வுகள் இன்றுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுச்சூழல் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்ட கழிவகற்றல் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வரை ஒரு முறையான கழிவகற்றல் திட்டம் உருவாக்கப்படவில்லை.
ஒவ்வொரு பிரதேச சபை ஊடாக கழிவுகள் சேகரிக்கப்படுகின்ற போதும், மாவட்டத்தில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த கழிவுகளையும் மீள் சுழற்சி செய்து முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான இடமோ அல்லது ஒரு செயற்றிட்டமோ இதுவரை உருவாக்கப்படவில்லை.
காலத்திற்கு காலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கும் அவற்றில் இருந்து பசளை தயாரிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் கூட்டங்கள் நடைபெற்ற போதும் இதுவரை ஒரு உருப்படியான திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
தற்போது வரை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கழிவுகளை கொட்டி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையங்களை அமைத்துள்ளனர். ஆனால் அதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
சர்வதேச சுற்றுச்சூழல் தினமான இன்று மட்டக்களப்பின் எதிர்காலத்தை பாதுகாப்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச சுற்றுச்சூழல் தினமான இன்றைய நாளில், மட்டக்களப்பு மாவட்டம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய சுற்றுச்சூழல் ஆபத்துக்கள் குறித்து அனைவரும் ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
இயற்கை வளங்களால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் பசுமை தாயகமாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டம் அதன் கடல் வளம், உப்பாறு, நன்னீர் வாவிகள் மற்றும் நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வாழ்வாதார அமைப்பைக் கொண்டுள்ளது.
இங்கு கிடைக்கும் மீன்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆனால் இன்று இந்த அரிய இயற்கை வளங்கள் அனைத்தும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இரசாயன கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நீரியல் உயிரினங்கள் மட்டுமன்றி மனித சுகாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கழிவு முகாமைத்துவம் இன்று வரை நீண்டகாலத் திட்டமிடலின்றி, முறையான பொறுப்புக் கூறல் பொறிமுறைகள் இல்லாத நிலையிலேயே காணப்படுகிறது.
மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த, விஞ்ஞான ரீதியான மற்றும் நிரந்தர கழிவு முகாமைத்துவத் திட்டம் குறித்து பல ஆண்டுகளாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும், இன்று வரை நடைமுறைக்கு ஏற்ற நிலையான தீர்வு உருவாக்கப்படவில்லை.
இதன் விளைவாக மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளுக்கு அருகில் திண்மக் கழிவு சேகரிப்பு மற்றும் கொட்டும் நிலையங்கள் நிறுவப்பட்டு, மக்களின் வாழ்வாதாரத்தையும் சுகாதாரத்தையும் நேரடியாக பாதித்து வருகின்றன.
குறிப்பாக கொடுவாமடு திண்மக் கழிவகற்றல் நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் நீண்டகாலமாக துர்நாற்றம், காற்று மாசுபாடு, நோய் பரவல் அபாயம் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும், மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், நிலையான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
மறுபுறம், ஏறாவூர் நகரப் பகுதியில் உள்ள வாவியோரங்களில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதால் வாவி மாசடைந்து வருகிறது. இந்த நீர்நிலைகளில் வாழும் மீன்கள் மற்றும் பிற நீரியல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன், அவற்றை உணவாக உட்கொள்ளும் மக்களின் ஆரோக்கியமும் எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுகிறது.
கடற்கரைப் பகுதிகளில் உருவாகும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுப்பாடற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களின் கழிவுகளும் கடல் வளத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. கடல் உயிரினங்களின் வாழிடங்கள் சேதமடைவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் ஆபத்துக்குள்ளாகிறது.
இதற்கு மேலாக, படுவான்கரைப் பகுதிகளில் இடம்பெறும் காடழிப்பு, கட்டுப்பாடற்ற கணிம மணல் அகழ்வு மற்றும் இயற்கை வளங்களின் அதிகப்படியான சுரண்டல் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்வையே சவாலாக எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு அரசியல் விவகாரம் அல்ல. அது நமது குழந்தைகளின் எதிர்காலம், மக்களின் ஆரோக்கியம் மற்றும் மாவட்டத்தின் பொருளாதார நிலைத்தன்மையுடன் நேரடியாக தொடர்புடைய ஒரு உயிர்வாழ்வு பிரச்சினையாகும்.
எனவே மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவத் திட்டம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
நீர்நிலைகள் மற்றும் வாவிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத கழிவு கொட்டுதல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
காடழிப்பு மற்றும் கட்டுப்பாடற்ற மணல் அகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் இல்லாமல் எந்த அபிவிருத்தித் திட்டங்களும் அனுமதிக்கப்படக் கூடாது.
மக்களின் பங்களிப்புடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
"நாம் இன்று பாதுகாக்கத் தவறினால், நாளை மட்டக்களப்பின் இயற்கை வளங்களையும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடும்." என தெரிவித்தார்.
ந.குகதர்சன்





