நாட்டின் கல்வித் துறையில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான நாடாளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்றபோது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் உதவி பெறும் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைகள், மாகாண மட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, தொழிற்கல்வித் துறையில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
இவ்விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கங்களைக் கேட்டறிந்த பிரதமர், நிலவும் பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு காண்பதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.
மேலும், அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள துணைக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், கல்வித் துறையில் தற்போது எதிர்நோக்கப்படும் பல்வேறு சவால்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்படும் போது தரநிலைகளுக்கு ஏற்ப ஒரே மாதிரியான பொதுவான வரைபடம் மற்றும் கட்டமைப்பு மாதிரியை அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.





