உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகரசபை ஆகியவற்றுக்கான எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறது.
இதன் மூலம், சாய்ந்தமருது மக்களின் மிக நீண்டகாலப் போராட்டத்துக்கு - ஒரு வரலாற்று வெற்றி கிடைத்திருக்கிறது.
2020ஆம் ஆண்டு சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால், நகரசபை கிடைக்கவில்லை. ’
கல்முனை மாநகர சபையின் கீழ்தான், சாய்ந்தமருது தொடர்ந்தும் இருந்து வந்தது.
இந்த நிலையில்தான், கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், தன்னுடன் ஏ.ஆர்.எம். அசீம் என்பவரை இணைத்துக் கொண்டு, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை 2023ஆம் ஆண்டு 07ஆம் மாதம் தாக்கல் செய்தார்.
”சாய்ந்தமருது நகரசபை 2020ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்த சபைக்கான தேர்தலை நடத்தாமல் விடுவது, எமது அடிப்படை உரிமை மீறல். எனவே, சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தலை நடத்துமாறு உத்தரவிடுங்கள்” எனக் கோரி, சலீம் தரப்பு அந்த மனுவில் கோரிக்கை விடுத்தது.
இதன் காரணமாக, இந்த வழக்கு முடியும் வரை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தலை நடத்தக் கூடாது என்று, நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
நீதியரசர்கள் ஜனக் டி.டி.சில்வா, பிரியந்த பெர்ணான்டோ மற்றும் சம்பத் அபேக்கோன் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த மனு மீதான தீர்ப்பை இன்று வழங்கியது.
மனுதாரர்கள் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் ஞானராஜ் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
சாய்ந்தமருது மக்களின் இந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்த்து, முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் நீதிமன்றில் ஆஜரானார்.
சாய்ந்தமருதுக்கான ஓர் உள்ளுராட்சி சபையைப் பெற்றுக் கொள்வதற்காக - அந்த ஊருக்குத் தலைமையேற்று, ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி சலீம் ஆற்றிய பணி மகத்தானது.
இன்று நீதிமன்றத்தில் நகரசபை என்ற நீதி கிடைத்துள்ளது.
( வி.ரி.சகாதேவராஜா)





