பல வருடங்களுக்குப் பின்னர் வானில் தோன்றும் ‘நீல நிலவு’

 


 பல வருடங்களுக்குப் பின்னர் வானில் தோன்றும் ‘நீல நிலவு’ என அழைக்கப்படும் அரிய வகை முழு நிலவை இன்று ( 31) இரவு பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர விடுத்துள்ள அறிவிப்பில், இந்த விசேட நிகழ்வானது பொதுவாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறையோ நிகழக்கூடிய ஒரு அரிய வானியல் நிகழ்வு என விவரித்துள்ளார்.



எனினும், 'நீல நிலவு' என்பது சந்திரன் நீல நிறமாக மாறுவதைக் குறிக்காது என்றும், ஒரே நாட்காட்டி மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழு நிலவே இவ்வாறு 'நீல நிலவு' என அழைக்கப்படுவதாகவும் விஞ்ஞான பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு வானம் மேகமூட்டமின்றித் தெளிவாகக் காணப்படும் பட்சத்தில், நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இந்த அரிய வானியல் நிகழ்வை பொதுமக்கள் தெளிவாகப் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.