சிறுவர் நன்னடத்தை மையமொன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல்

 


பதுளை - வெலிமடை பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை மையமொன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் மீது அங்கிருந்த ஊழியர்கள் தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

பின்னர் 119 எனும் அவசர எண்ணுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை வெலிமடை பொலிஸார் கைது செய்து வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.