வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதல்முறை..

 


இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி தோ லாம் (To Lam), இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

குறித்த அறிக்கையில், வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதல்முறை எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடைசியாக உரையாற்றிய வெளிநாட்டுத் தலைவர் 2015ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் அனைத்து கௌரவங்களும் விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற விசேட நிகழ்வில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி தோ லாமை உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.