பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்த விதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ கடுமையாகத் தடை செய்துள்ளது.
2016 ஏப்ரல் 29ஆம் திகதியிட்ட 12/2016 இலக்கச் சுற்றறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் புதிய ஏற்பாடுகள், விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள சுற்றறிக்கையை செயற்படுத்தும்போது, வழக்கு எண் 461/2012 (FR) தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் 17வது பத்திக்கு விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த மாணவரும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டிய கல்வியாளர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளின் பொறுப்பை அந்தத் தீர்ப்பு தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, அனைத்து மட்டங்களிலும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்றும் இதை மீறும் எவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளில் ஒழுக்கமானது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் வன்முறையற்ற முறைகளின் மூலம் பேணப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்றும் மாணவர் ஒழுக்கத்தை கையாளும்போது உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.





