தெஹ்ரானில் நடைபெறவிருந்த கமேனியின் இறுதிச் சடங்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தெஹ்ரானில் நடைபெறவிருந்த கமேனியின் இறுதிச் சடங்குகள் 'நிர்வாகக் காரணங்களுக்காக' ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த இடத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

1989 இல் கொமெய்னியின் இறுதிச் சடங்கில் சுமார் 10 மில்லியன் மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் மிக நெருக்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக மூத்த மதகுரு அயதுல்லா அஹ்மத் கத்தாமி தெரிவித்துள்ளார்.

88 உறுப்பினர்களைக் கொண்ட 'நிபுணர்கள் சபை' (Assembly of Experts) புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.

கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) அடுத்த தலைவராக வர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இவர் அண்மைய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார்.

ஈரானின் அடுத்த தலைவராக யாரை நியமித்தாலும், அவர் இஸ்ரேலை அழிக்கும் கொள்கையைக் கொண்டிருந்தால் நிச்சயம் கொல்லப்படுவார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

ஈரானில் அமெரிக்காவிற்கு நட்பான ஒரு தலைமை உருவாவதையே தான் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவினாலும், ஈரானின் அதிகாரக் கட்டமைப்பு மற்றும் கட்டளைச் சங்கிலி இன்னும் வலுவாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.