மட்டக்களப்பு - செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக 70,000 ரூபாய் தண்டப்பணம் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன் மற்றும் ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து உணவக பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
பொது சுகாதாரத்திற்கு இடையூறாக கழிவு நீரை திறந்த வெளியில் வெளியேற்றியதுடன், வண்டுகள் காணப்பட்ட நிலையில் உணவு மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதார பரிசோதகர் தவேந்திரராஜா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிவான், உணவக உரிமையாளருக்கு 70,000 ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், தேவையான திருத்தப் பணிகள் நிறைவு செய்யப்படும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட பெருமளவான வண்டுகள் காணப்பட்ட கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் கடலை உள்ளிட்ட உணவு பொருட்களை அழிக்கவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.






