ஈரானில் அமெரிக்கா இன்னும் தாக்காத சில இலக்குகள் உள்ளதாகவும் அவற்றை ஒரே நாளில் தாக்கி அழிக்க முடியும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“அந்த இலக்குகளைத் தாக்குவதற்கு முன் என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்க்கிறோம். அவற்றை தாக்குவது மிகவும் எளிது. ஆனால் அவை தாக்கப்பட்டால் ஈரானுக்கு பெரும் சேதம் ஏற்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட காலத்தைக் காட்டிலும் வேகமாக முன்னேறி வருகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாதத்துக்குப் பிறகு இவ்வளவு முன்னேற்றம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்றும் ஆனால் இப்போது தாங்கள் இத்தகைய நிலைக்கு வந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி சுமார் 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையில் பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளதாகவும், இந்த பணி பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதன்படி, இதுவரை 5000 இற்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ட்ரோன் உற்பத்தி நிலையங்கள், ஈரானின் கடற்படை பலம் தொடர்பான இடங்கள் மற்றும் ஏவுகணை திறன்களை உள்ளடக்கிய இடங்களும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவற்றின் விளைவாக, ஈரானின் ஏவுகணை திறன் தற்போது சுமார் 10 வீதம் அல்லது அதற்கு கீழேயும் குறைந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.





