அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு
மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் யுத்த கால சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால் மிக்க காலகட்டங்களில் கூட முழுநேரமாக களப் பணியில் ஈடுபட்டவர் ; அத்துடன் தனது துணிச்சலான,நேர்மையான
எழுத்துக்கள் ஊடாக வாசகர்களின் உள்ளங்களை ஆகர்ஷித்தவர் என அவரது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அதில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் ஏ எல். எம். சலீம் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன்.அவரது மறைவு குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும் மட்டுமல்லாது, நாடளாவிய ரீதியிலும் தமிழ், முஸ்லிம் வாசகர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் முன்னாள் அமைச்சர் எம்.எச் . எம் .அஷ்ரப் அவர்களின் நம்பிக்கைக்குரிய சிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஏ.எல்.எம்.சலீம் அப்போதைய
யுத்த கால சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால் மிக்க காலகட்டங்களில் கூட முழுநேர ஊடகவியலாளராக அயராது களப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எங்கள் மறைந்த ஸ்தாபகத் தலைவரின் வழிகாட்டலில் வளர்ச்சியடைந்து வந்த ஆரம்ப கால கட்டங்களிலிருந்து, அதன் அவசியத்தை உணர்ந்து எங்கள் அனைவரோடும் இணைந்து அதன் முன்னேற்றத்திற்கு ஊடகத்துறையில் உயரிய பங்களிப்பை செய்தவராக நாங்கள் அவரை எப்பொழுதும் மதிக்கிறோம்.
அவர் மறைந்த தலைவருக்கும், எனக்கும் அவ்வப்போது உரிய ஆலோசனை வழங்கி வந்ததோடு, எங்களது கூட்டங்களுக்கு வந்து அமைதியாக நிலைமையை அவதானித்தும்,பொது மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிந்தும் சுறுசுறுப்பாக செய்திகளைச் சேகரித்து, அவற்றை உடனுக்குடன் சுடச்சுட ஊடகங்களுக்கு
வழங்குவதில் ஆர்வமாக இருந்தார்.
அவர் தனது துணிச்சலான,நேர்மையான
எழுத்துக்கள் ஊடாக மக்கள் மனங்களை ஆகர்ஷித்தவர்.நாட்டின் தலைசிறந்த தமிழ் பேசும் ஊடக ஜாம்பவான்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களது உள்ளங்களை வென்றவர். சராசரி பிராந்திய செய்தியாளர் ஒருவராக அவர் தனது ஈடுபாட்டை சுருக்கிக் கொள்ளவில்லை.தலைநகரிலிருந்தும்,வட புலத்திலிருந்தும் வெளிவரும் பத்திரிகைகள் ஐந்து தசாப்தங்களாக அவரது கனதியான எழுத்துக்களுக்கு தாராளமாக இடமளித்து வந்துள்ளமை அன்னாரின் திறமைக்குச் சான்றாகும்.
கலாபூஷணம் ஏ .எல். எம் சலீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததோடு,கரையோர,அம்பாறை மாவட்ட ஊடக அமைப்புகளிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம்(Editors Guild) அவருக்கு " வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவித்திருந்தது.
சமூக ஒற்றுமையையும்,தமிழ்-முஸ்லிம் உறவையும்,தேசிய ஒருமைப்பாட்டையும் நண்பர் சலீம் நெடுகிலும் வலியுறுத்தி வந்திருக்கிறார். அன்னாரின் மறைவு நாட்டில் தமிழ், முஸ்லிம் ஊடக துறைக்கு ஓர் இழப்பு மட்டுமல்ல, கிழக் கிலங்கையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர் மத்தியில் ஓர் பாரிய இடைவெளியைத் தோற்றுவித்திருக்கிறது .
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவன பாக்கியத்தை வழங்கி அருள்வானாக .அவரது மறைவினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, மக்களுக்கும்,உறவினர்களுக்கும்,ஊடக நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.





