மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக மகளிர் தின கொண்டாட்டம் 2026.



















































































பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப்பொருளை பிரதிபலிக்கும் நோக்குடன் 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினம் 10. 03.2026 செவ்வாய்க்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் வெகு விமர்சையாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக சிறுவர் மற்றும்  பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச மகளிர் மற்றும் சிறப்பு அதிதியாக ஆரையம்பதி வைத்தியசாலை உளநல வைத்திய அதிகாரி டாக்டர் சுசிகலா பரமகுருநாதன் , ஆரையம்பதி வைத்தியசாலை வைத்திய அத்தியதசகர் Dr. ரவிச்சந்திரன் மற்றும் மண்முனைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி ரோகிணி விக்னேஸ்வரன் கௌரவ அதிதியாக காத்தான்குடி சிறுவர் பெண்கள் பிரிவு பெண் போலீஸ் சாஜன் செல்வி எஸ்.அனன்சியா ஆகியோரும் விசேட அதிதியாக இந்தியாவிலிருந்து வருகை தந்த முனைவர் எஸ்.டி கலையமுதன் மற்றும் கதிரவன் பட்டிமன்ற குழுவினர் அத்துடன் உதவிப்பிரதேச செயலாளர் , கணக்காளர் , நிருவாக உத்தியோகத்தர் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் , சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச பெண் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முதல் அம்சமாக ஏற்பாட்டுக்  குழுவினரால் அதிதிகளை மாலையிட்டு வரவேற்று மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து உலக மகளிர்களுக்காக போராடி தன் உயிர் நீத்த வீரர்களுக்கும் தலைவர்களுக்கும் ஒரு நிமிட மௌன அகவணக்கம் செலுத்தப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர் திருமதி அனுஷா ரவீந்திரன் அவர்களின் அதிதிகளை வரவேற்கும் வரவேற்பு நடனமும் உதவிப் பிரதேச செயலாளர் இளம்குமுதன் அவர்களினால் வரவேற்புரையும் பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கௌரி தினேஷ் அம்மணி அவர்களினால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சுவரொட்டி ஒட்டுகின்ற நிகழ்வும் இடம்பெற்றது. மேலும், மண்முனைப்பற்று பிரதேச பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தலும் விற்பனை கண்காட்சியும் திறந்து வைக்கும் நிகழ்வு அதிதிகளினால் இடம்பெற்றது. இதில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் வண்ணம் அதிதிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் பொருட்களை கொள்வனவு செய்தனர்.
அதனை தொடர்ந்து கதிரவன் பட்டிமன்ற பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பட்டிமன்றம் “பெண்களை கொண்டாடும் ஆண்கள் அதிகமாக உள்ளனரா குறைவாக உள்ளனரா” எனும் தலைப்பில் இடம்பெற்றது. இப்ப பட்டிமன்றத்திற்கு சொல்லாடல் செய்வதற்காக சட்டத்தரணி அ. அன்பழகன் குரூஸ் ,கதிரவன் த.இன்பராசா , பாலமீன்மடு இரா.கலைவேந்தன், சோலையூரான் ஆ.தனுஸ்கரன், மட்டுநகர் சிவ வரதகரன், கவிமகள் ஜயவதி ஆகியோர் கலந்துகொண்டு செந்தமிழ் சொல்லெடுத்து தீந்தமிழால் கவியெடுத்து சொல்வேந்தன் நானென்று தத்தம் பாணியிலே எடுத்தியம்ப, நடுவனம் புரியவென்று பாரத தேசம்விட்டு கிழக்கிலங்கை தேசம் வந்த நம் முனைவர் தமிழ்தென்றல் ஞானச்செவ்வேள் எஸ்.டி.கலையமுதன் மிகச்சிறப்பாக நடுவனம் புரிந்தார். இவ்வாறாக நயமும் ரசனையும் கவியும் சொல்லாடலும் நிறைந்த சிறப்புமிக்க பட்டிமன்றமாக மகளிர் தின பட்டிமன்ற நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
அதனைத் தொடர்ந்து பங்குபற்றிய அனைத்து பெண் தொழில் முயற்சியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 
அத்துடன் மண்முனைப்பற்று மகளிர் சங்க அமைப்பினால் மண்முனைப்பற்றுக்கான சிறந்த மகளிர் ஒருவரை கௌரவிக்கும் நிகழ்வாக மண்முனைப்பற்றுக்கு புகழ் தேடித்தந்த ஓர் மகளிரை தெரிவு செய்து அவரை கௌரவிக்கும் முகமாக மகளிர் மகாசங்கத்தினால் அரசு நிர்வாக சேவையில் சேவையாற்றி மக்கள் நன்மதிப்பைப் பெற்ற எமது பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி தினேஷ்  அம்மணி அவர்களுக்கு விருது வழங்கி பொன்னாடை அணிவித்து கெரவிக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.
அத்துடன் மண்முனைப்பற்று சமுர்த்தி மகாசங்கத்தினால் உண்டியல் மூலம் சேமிக்கப்பட்ட பணத்தில் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டமாக இரண்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் கவிதை பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக உளவளத்துணை உதவியாளர் திரு.நிஷாந்தன் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வானது பி.ப. 1.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.