நிபந்தனையுமின்றி ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைக்க வேண்டும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதான கோரிக்கை.

 

 


ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. 
 
இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 
 
இதனிடையே, இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள பலரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் உடல்நிலை நலிவடைந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். 
 
இவருடன் சேர்த்து இதுவரை அறு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
கடந்த 6 வருடங்களுக்கும் அதிகளவான காலம் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை, எவ்வித நிபந்தனையுமின்றி ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைக்க வேண்டும் என்பதே இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 
 
இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை மாலை 6 மணிக்கு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.