மாணவர்கள் தொழிற்கல்வி ஊடாக முனைவர் பட்டம் வரை உயர்ந்து செல்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

 


இலங்கையில் எந்தவொரு பிள்ளையும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக தொழிற்கல்வி அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை இழக்காத வகையில் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டங்கள் அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 
 
பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களின் பாதீட்டுத் திட்ட உருவாக்கம் மற்றும் மூலோபாயத் திட்டமிடல் குறித்த பட்டறை ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
 
அத்துடன் தொழிற்கல்வித் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அபிவிருத்தித் திட்டங்கள், தேசிய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்துடன் (National Economic Development Plan) சீரான முறையில் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 
 
மேலும் தொழிற்கல்வி நிறுவனங்கள் வெறும் திறமையான பணியாளர்களை மட்டும் உருவாக்காமல் கருணை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் கொண்ட மனிதநேயமிக்க நிபுணர்களை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 
 
செயற்கை நுண்ணறிவு புரட்சி வேலைவாய்ப்பு சந்தையை எவ்வாறு மாற்றியமைக்கின்றது என்பதை உலகம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. 
 
எனவே, தொழிற்கல்வியை நாட்டின் பிரதான கல்வி முறைக்குள் ஒருங்கிணைக்கும் சீர்திருத்தங்கள் காலத்தின் கட்டாயமாகும். முந்தைய தொழிற்புரட்சிகளில் நடந்தது போல இலங்கை ஓரங்கட்டப்படக்கூடாது. 
 
தொழில்நுட்பம் நிகழ்நிலை கல்வியை வழங்கினாலும், முதியோர் மற்றும் சிறுவர் பராமரிப்பு போன்ற மனித நேயம் தேவைப்படும் துறைகளில் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். 
 
எனவே, மென்திறன்கள் (Soft Skills) மற்றும் மனிதநேய அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 
 
அத்துடன் மாணவர்கள் தொழிற்கல்வி ஊடாக முனைவர் பட்டம் வரை உயர்ந்து செல்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். 
 
அதேபோல், பணியில் இருப்பவர்கள் மீண்டும் கல்விக்குள் நுழையக்கூடிய (Lateral entry) நெகிழ்வுத்தன்மை அவசியம். இந்த நெகிழ்வுத்தன்மையுடன் தரத்தையும் (Quality) பேணுவது மிக முக்கியமானது. 
 
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி கிடைப்பதை உறுதி செய்து, அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் தனது உரையில் மீண்டும் ஒருமுறை உறுதிபடத் தெரிவித்தார்.