மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் பெரும் இடை ஞ்சலுக்கு உள்ளாகும் பொது மக்கள் .

 


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பிரதான வீதிகளில் பகலிலும், இரவு வேளைகளிலும், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகளும், பிரயாணிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் வீதிகயில் குறுக்கீடு செய்து திரிவதனால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதோடு, வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளகின்ற போதிலும் கடைகளிற்குள்ளும், ஏனைய வர்த்தக நிலையங்களிற்குள்ளும் புகுந்து திரிவதாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

களுவாஞ்சிகுடி பிரதான சந்தியில தற்போது போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டு படிப்படியாக அபிவிருத்தி அடைந்து வருகின்ற இந்நிலையில், அதிக சனநடமாட்டமுள்ள பிரதான வீதி, பொதுச் சந்தை தொகுதி, பட்டிருப்பு சந்தி, வைத்தியசாலை வீதி, உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.

அப்பகுதியில் எமது வியாபாரங்களைச் சுமுகமான முறையில் மேற்கொள்வதற்கும், வீதி விபத்துக்களைத் தடுப்பதற்குமாக  இவ்வாறு கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளை உடன் சம்மந்தப்பட்டவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடிப் பொலிசாருடன் இணைந்து இப்பிரதேசத்திற்குள் இவ்வாறு கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைக் கட்டுவதற்கும், மாடுகளின உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதே சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.