மட்டக்களப்பு பழுகாமம் இந்து கலா மன்றத்தின் பொன்விழாவும் பொங்கல் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.




















திலக்ஸ் ரெட்ணம் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலா மன்றத்தின் பொன்விழாவும், பொங்கல் விழாவும் மன்றத்தின் தலைவர் திரு. இரா. திலக்ஷன் அவர்களின் தலைமையில் 01.02.2026 ஆம் திகதி பழுகாமம் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பமாக ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் பொன்விழா ஊர்தி இணைந்த கலாசாரப் பவனி பிரதான வீதியூடாக மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த கலாசாரப் பவனியில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீ மகாராஜ், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன் ஆகியோருடன் பல கிராமப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பழுகாமம் கலாசார மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகள், புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள், மேலும் தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில் அகில இலங்கை ரீதியாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும், பொன்விழாவை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட 'பஜனைப் பாடல்கள்' எனும் சிறப்பு மலர், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீ மகாராஜ் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீ மகாராஜ், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன், வைத்திய நிபுணர் திரு. சோ. குமணன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. க. ரகுகரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.