நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக
முன்வைக்கப்பட்டுள்ள "நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்"
எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக
அமையாததால், இதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற
முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஓய்வூதியச் சலுகைகளை வழங்குவது அரசியலமைப்பை
உருவாக்கியவர்களின் நோக்கமாக இருக்கவில்லை என்று நீதிமன்றம்
சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய ஓய்வூதியச் சட்டம் சட்டத்தின் முன்
அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுவதாகவும்,
புதிய சட்டமூலம் அந்த விதிவிலக்கை நீக்கி சமத்துவத்தை
உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
இந்தச்
சட்டமூலமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட தெளிவான ஆணையின்
அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம்
ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின்
குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதிய முறைமையை நீக்கக்
கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம்
இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 121(1)
உறுப்புரையின் கீழ் இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு
உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இது தொடர்பான தமது
வியாக்கியானத்தை இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.
அதற்கமையவே இந்த வியாக்கியானம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி,
இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெற்று வந்த ஓய்வூதியக்
கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





