ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை .

 


ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோசடிகளிலிருந்து தப்பிக்க, ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வங்கிகளுக்கு அருகில் நின்றுகொண்டு, ATM இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளைத் திருடி வந்த நபர் ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 11 வங்கி அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தெற்கு களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடமை நிமித்தம் அரச வங்கி ஒன்றிற்கு சென்றிருந்தபோது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், வங்கிக்கு அருகிலேயே நடமாடிக் கொண்டிருந்த சந்தேகநபரை சுற்றிவளைத்து கைது செய்து, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக பொலன்னறுவை மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது. 

எனவே ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.