மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் .

 


மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனவரி 30ஆம் திகதி பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தியின் ஒழுங்கமைப்பில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை,கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், திணைக்கள பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலகத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான விளக்க உரையுடன் கூட்டம் ஆரம்பமானது.

இதன்போது, முன்னைய பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கூட்டறிக்கை முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.

இக் கூட்டத்தில்,
மண்முனை மேற்கு பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை, சட்ட விரோத மண் அகழ்வு, காட்டு யானைகளின் தாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக பிரதானமாக ஆராயப்பட்டன.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அரச திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் இணைந்த பங்களிப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

பிரதேச மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிட வேண்டியதன் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னைய பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாக மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிருவாக நடவடிக்கைகளின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் துறைசார் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.