வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு மேற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு கரையை அண்மிக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது வடக்கு மாகாணத்திற்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 15 ஆம் திகதி குறைவடையும். கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 16, 17ம் திகதிகளில் ஒரு சில இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டாலும் பின்னர் 18 ஆம் திகதி முதல் பல இடங்களுக்கும் பரவலடையும். இதேவேளை மத்திய, ஊவா, வட மத்திய, தென் மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு மேற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு கரையை அண்மிக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ( இது இன்றைய நாளின் கணிப்பு. இதில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளவும்).
இதனால் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அறுவடைச் செயற்பாடுகள் தொடங்கிய பின்னர் இந்த தாழமுக்கம் உருவாகியுள்ளது.
ஆகவே இந்த நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு முன்னர் அறுவடைச் செயற்பாடுகளை முடிப்பது உகந்தது.
ஏனெனில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிடைக்கவிருக்கும் மழை சற்று வேகமான காற்று வீசுகையோடு நிகழும் என்பதனால் நன்கு முற்றி விளைந்த நெற்கதிர்கள் பாதிப்படையும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே இயன்றவரை அதற்கு முன்பதாக அவற்றை அறுவடை செய்வது உகந்தது.
அதேவேளை எதிர்வரும் 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை கிடைக்கவிருக்கும் மழையை சிறுபோக விதைப்பு ஆரம்பித்தலுக்கான மழையாக கருதலாம்.
ஏனெனில் கடந்த 05 ஆண்டுகளாக லாநினோ அமைப்பில் இருந்த இந்து சமுத்திர அமைப்பு எல் நினோ நிலையை நோக்கி ( அடுத்து வரும் இரண்டு ஆண்டுகள்) நகர்கின்றது. எதிர்வரும் ஜுன் வரை நடுநிலை அமைப்பில் இருக்கும் என்பதனால் சற்று அதிக வெப்பநிலையும் அதிக ஆவியாக்க அளவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் மேற்பரப்பு நீர்நிலைகள் வேகமான நீரிழப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே எதிர்வரும் 20ம் திகதி முதல் கிடைக்கவிருக்கும் மழையை சிறுபோக விதைப்புக்கான மழையாக கருதினால் எங்கள் குளங்களின் நீரை சிறு போகத்துக்காக உச்ச அளவில் பயன்படுத்த முடியும்.
உருவாகவிருக்கும் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் கிழக்கு, வடக்கு, தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என தெரிவித்துள்ளார்.





