மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்.

 



மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம் பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நடைபெற்றதுடன் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர் கலந்து கொண்டு அவர்களினால் செயற்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினர்.

எதிர் வரும் காலங்களில் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பை மேற்கொள்வதற்கு தேவையான செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை வகுத்ததுடன் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடல் இடம் பெற்றது.

பிரதேச மட்டத்தில் சிறுவர் மற்றும் இளைஞர் யுவதிகள், அரச உத்தியோகத்தர்கள், என பல்வேறு தரப்பட்ட நபர்களுக்கான விழிப்புணர்வு மூலம் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந் நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகத்தர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் புனர்வாழ்வு தொடர்பான செயற்திட்டங்களை மேற்கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும் மாவட்டத்தில் போதைப்பொருள் பாதிப்பிற்குள்ளான நபர்களுக்கான சேவை மையம் ஒட்டமாவடி பிரதேத்தில் எதிர்வரும் (19) திகதி திறந்து வைத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.