இலங்கையில் பயன்பாடு தற்காலிகமாக
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'ஒன்டன்செட்ரான்' (Ondansetron) எனும் மருந்து
தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 7 பேர் கொண்ட நிபுணர்
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மருந்தைப் பயன்படுத்திய பின்னர் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மருந்து காரணமாக
ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் சிக்கல்கள் குறித்து இந்த குழு அறிவியல்
ரீதியான விசாரணைகளை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மருந்தினை இலங்கையில் இதுவரை சுமார் 200,000 பேர் வரை பயன்படுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்
உயிரிழப்புக்கள் தொடர்பான மேலதிக விபரங்களைச் சேகரிக்கவும், மருந்தின் தரம்
குறித்து ஆராயவும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள்
ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிபுணர் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை குறித்த மருந்தின் பயன்பாட்டிற்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





