பொய்யான தகவல்களால் பதற்றமடைந்த மக்கள்,அங்கிருந்து தப்பிச் செல்லும் போது உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன,மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 


அனர்த்த காலங்களில் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கொத்மலை நீர்த்தேக்க அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்களையடுத்தே இவ்வாறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இந்த பொய்யான தகவல்களால் பதற்றமடைந்த மக்கள்,அங்கிருந்து தப்பிச் செல்லும் போது உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறான இக்கட்டான நிலைமையின் போது மக்களின் மன நிலையை புரிந்து கொண்டு தகவல்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த போலித்தகவல்களால் அச்சமடைந்து மனப்பிறழ்வு ஏற்பட்ட பலர்,இன்னும் அந்த பகுதிகளில் பதற்றத்துடன் உள்ளதாக கொத்மலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.கொத்மலை அணையின் வான்கதவுகளில் ஒரு வான்கதவை திறப்பதற்காக எழுப்பிய வழமையான பாதுகாப்பு ஒலியை அடிப்படையாகக் கொண்டு, இந்த பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மக்களை பீதிக்குள்ளாக்கும் இந்த சமூக எதிரிகளை அடையாளம் காணுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாகாணங்களின் ஆளுநர்களுடன் நேற்று (02) இடம்பெற்ற ஷூம் தொழினுட்ப கலந்துரையாடலிலே,இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாகாண பொலிஸ் தலைமை அதிகாரிக்கு, உத்தரவிட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.