மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளின் மனித நேய செயற்பாடு. தமது ஒருவேளை உணவை தவிர்த்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி .

 


மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர்.

இவ்வுலர் உணவுப் பொருட்களை சிறைக் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கினர். 

அதனை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர்  நல்லையா பிரபாகரன்  நேரில் சென்று கையளித்தார். 

நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ரத்நாயக்க உள்ளிட்ட ஏனைய உத்தியோதர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

அண்மையில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து தங்களால் முடிந்த உதவிகளை பலரும் பல பாகங்களிலிருந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.