மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மான் இறைச்சி உட்பட வேன் மோட்டார் சைக்கிள் என்பன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சம்மாந்துறைப் பகுதியில் உள்ள பளவழி கிராமம் (12 வீட்டுத்திட்டம்) புதிய வளத்தாப்பிட்டியில் வெள்ளிக்கிழமை(12) மாலை குறித்த இரு சந்தேக நபர்கள் உட்பட ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமார நெறிப்படுத்தலில் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





