வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்பதற்கான கால அவகாசத்தை, மேலும் 06 மாதங்கள் நீடிக்குமாறு கோரிக்கை .

 


இயற்கை பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையைக் கருத்திற்கொண்டு,ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான மேனியோகநாயகன அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்து, பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்குச் சில முக்கிய சலுகைகளை உடனடியாக வழங்க கருணையுடன் செயற்படுமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.இதற்கமைவாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்பதற்கான தற்போதைய 12 மாத கால அவகாசத்தை, மேலும் 06 மாதங்கள் நீட்டித்து, மொத்தம் 18 மாதங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களுக்கான மாதத் தவணைகளைச் செலுத்துவதற்கு 06 மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.இந்த தாமத காலத்தில் கூடுதல் வட்டி, அபராதம் போன்ற சுமைகள் ஏதும் விதிக்காமலிருக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட வாகன லீசிங் தவணைக் கட்டணங்களையும் இதேபோல 06 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த ஒத்திவைப்புக் காலத்தில் எவ்விதமான கட்டண உயர்வும் இன்றி உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் முன்னணி, நாட்டு மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் தோள் கொடுக்கவும், நிவாரணம் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் என்று திடமாக நம்புவதாகவும், ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் மற்றும் செயலாளர் நாயகம் மேனியோகநாயகன் அந்த கடித்தத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.