உயர்தரப் பரீட்சை நேரத்தில் எதிர்ப்பு பேரணி: பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது

 


தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக, இன்று( 21) திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் ஏற்பாட்டாளர்கள், அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில், நுகேகொடை பகுதியின் மையத்தில் அமைந்துள்ள அனுலா மகளிர் வித்தியாலயம், புனித ஜோன்ஸ் கல்லூரி, புனித ஜோசப் மகளிர் வித்தியாலயம், சமுத்ரா தேவி மகளிர் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில், திட்டமிடப்பட்ட பேரணி நடைபெறும் அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெறுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. 
 
தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையைப் பாதிக்கக்கூடிய சத்தம், நெரிசல் அல்லது இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில் நிகழ்வை நடத்துமாறு பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 
 
பரீட்சை நடைபெறும் பகுதியைப் பாதுகாக்கவும், மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.