சர்வதேச சட்டங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது- நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும்.

 


சர்வதேச சட்டங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது. அந்த விடயம் குறித்துப் பேசும் முன் நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

”கச்சத்தீவு, இந்தியா இலங்கைக்கு விட்டுத்தந்ததல்ல. சர்வதேச சட்டங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டதால்தான் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1974ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவிடம் கையளித்தார்.

 இலங்கையிடம் கச்சத்தீவு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில் 1600ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி பழமையான ஆவணங்கள் உள்ளன.

ஐ.நா அமைதிப் பணியில் மூன்று தசாப்தங்கள் பணியாற்றிய இந்திய நிபுணர் கண்ணன் ராஜரத்தினமும் சர்வதேச சட்டங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது இந்தியாவிடம் இதை நிரூபிக்க போதுமான ஆவணங்கள் இல்லை. 

ஆகையால், முன்னாள் நடிகரும் தற்போதைய அரசியல்வாதியுமான விஜய், கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு முன், இந்திய கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தும் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட ஆழ்வலை கடற்றொழில் முறையின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை அவர்களுக்கு முன்னெடுக்க வேண்டும். 

ஏனெனில் கச்சத்தீவை விட முக்கியமான விடயம் தமிழக கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய ஆழ்வலை கடற்றொழில் முறையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.