இல்லிடமற்றவர்களுக்கு 23 இல்லங்களை வழங்கிய விஜீவா தம்பதியர் வரலாறாகி விட்டார்கள்! பாண்டிருப்பில் பணிப்பாளர் மருத்துவர் முரளீஸ்வரன் புகழாரம்!

 




 














இப் பிராந்தியத்தில் இல்லிடமற்றவர்களுக்கு இதுவரை 23 இல்லங்களை வழங்கி பல்வேறு சேவைகளை புரிந்து வரும் சுவிஸில் வாழும் விஜயகுமாரன் ஜீவா தம்பதியர் வரலாறாகி விட்டார்கள்.

இவ்வாறு பாண்டிருப்பில் நடைபெற்ற அன்பு இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் புகழாரம் சூட்டினார்.

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் இரா. விஜயகுமாரன் குபேரலட்சுமி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வி. கஜானந்தின் 17 ஆவது பிறந்த நாளைமுன்னிட்டு அவர்களது முழுமையான நிதி பங்களிப்பில், பாண்டிருப்பில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றுக்கு அன்பு இல்லம் -09 வீடு கையளிக்கும் விழா நேற்று (16) செவ்வாய்க்கிழமை பாண்டிருப்பில் நடைபெற்றது.

இவ்வீடு விஜீவா தம்பதியினர் நிருமாணித்து வழங்கும் 23 வது வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வீடு திறக்கும் விழா அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர். எம். ஜெயராஜியின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். மருத்துவர் இரா. முரளீஸ்வரன்,  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர். ரி.ஜே. அதிசயராஜ் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான. விபுலமாமணி வித்தகர் வீ.ரி சகாதேவராஜா, சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் பணிப்பாளர் விஜயகுமாரனின் துணைவியார் குபேரலட்சுமி( ஜீவா) ஆகியோர் அதிதிகளாக கலந்து வீட்டைத் திறந்து வைத்து சிறப்பித்தனர்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இல்லத்தை வழங்குதல் கோடி புண்ணியம் கிடைக்கும். ஜீவா தம்பதியினரின் உன்னதமான சேவைக்கு பாராட்டுக்கள் என்றார்.

அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து வீட்டுரிமையாளர்கள் கொடை வள்ளல் திருமதி குபேரலட்சுமி விஜயகுமாரனுக்கு நினைவு வாழ்த்துப்பத்திரத்தை வழங்கி வைத்தனர்.

விழாவில் பாண்டிருப்பு இந்து இளைஞர் மன்ற பிரதிநிதிகள், ஆலய பரிபாலன சபையினர், சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் தாயக உறவுகள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 பாண்டிருப்பு சர்மிலன் வீதியைச் சேர்ந்த புலேந்திரன் சந்திரிகா 
  தம்பதியினருக்கு இந்த வீடு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 ( வி.ரி.சகாதேவராஜா)