திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் சூட்சுமமான முறையில் 04 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செய்கையை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
விசேட பொலிஸ் அதிரடி படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன்த த சில்வாக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து சுற்றுவளைப்பை மேற்கொண்டனர்.
இதன் போது நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நிலையில் கஞ்சா மரங்கள் மீட்கப்பட்டதாகவும், தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி கீர்த்தி சிங்ஹ உட்பட அவரது குழுவினர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த கஞ்சா செடிகளை பிடிங்கி தீ மூட்டியதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தினையும் அகற்றினர்.
அத்துடன் குறித்த கஞ்சா பயிர் செய்கையை சூட்சுமமான முறையில் செய்துள்ளதாகவும் குறித்த பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக கிணறு ஒன்றிணையும் அமைத்துள்ள நிலையில் மின்சாரத்தினை சூரியசக்தி ஊடாக பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த கஞ்சா பயிர் செய்கை தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.